இனவெறி பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

சுவிட்சர்லாந்தில் இனவெறி மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சட்டம் இல்லை. இருப்பினும், சுவிட்சர்லாந்து அதன் அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டத்தில் பாகுபாட்டை தடை செய்கிறது. தனியார் சட்டத்தில் (சிவில் சட்டம்) இனவெறி மற்றும் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கும் சில பிரிவுகள் உள்ளன.

"இனம்" என்ற வார்த்தையின் பயன்பாடு

"இனம்" என்ற சொல் பெரும்பாலும் சட்டத்தில் பயன்படுத்தப் படுகிறது. இந்தக் காரணத்திற்காக, உண்மையில் மனிதனில் இனங்கள் இல்லாவிட்டாலும், "இனம்" என்ற வார்த்தையை நாமும் பயன்படுத்துகிறோம். மனிதர்கள் அனைவரும் ஒரே ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் மக்களின் மனதிலும் மனப்பான்மையிலும், "இனங்கள்" என்ற எண்ணம் இன்னும் உள்ளது.

இது ஒரு சமூகக் கற்பிதம். இனப் பாகுபாடு இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது:

மக்கள், தங்கள் "இனம்" காரணமாக, தங்களுக்கு இடையே சமமாக இல்லை. மனிதனில் இனங்கள் இல்லாவிட்டாலும் கூட.

கூட்டாட்சி அரசியலமைப்பு

சுவிஸ் சட்டங்களில் கூட்டாட்சி அரசியலமைப்பு மிக முக்கியமானது. கூட்டாட்சி அரசியலமைப்பு நாட்டின் முக்கிய விதிகளை வரையறுக்கிறது. அது சுவிட்சர்லாந்து மற்றும் அதன் அதிகாரிகளுக்கு இடையே தனிநபர்களின் அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்கிறது.

அரசியலமைப்பில் எழுதப்பட்டவை (முக்கிய விதிகள் மற்றும் உரிமைகள்) மக்களுக்கு இடையிலான உறவுகளைப் பற்றியது அல்ல. அது மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான உறவைப் பற்றியது மட்டுமே. அரசியலமைப்புச் சட்டம், அரசின் துஷ்பிரயோகங்கள் அல்லது அநீதிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறது.

கூட்டாட்சி அரசியலமைப்பு (Cst.) சட்டத்தின் முன் அனைத்து மனிதர்களும் சமம் (பிரிவு 8 பத்தி 1) என்று கூறுகிறது.

அதே பிரிவின் பத்தி 2 யாருக்கும், எதன் காரணமாகவும், உதாரணமாக, அவர்களின் தோற்றம், "இனம்", மொழி, வாழ்க்கை முறை அல்லது மத நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக பாகுபாடு காட்டப் படக்கூடாது என்று குறிப்பிடுகிறது.

தண்டனைச் சட்டம் மற்றும் அதன் பிரிவு 261b

தண்டனைச் சட்டம் என்பது ஒரு கூட்டாட்சி விதிமுறை ஆகும்.

அது நமது சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களை வரையறுக்கிறது. அது அந்த செயல்களுக்கான தண்டனைகளை கூறுகிறது.

மற்றவர்களை வெறுப்பு மற்றும் பாகுபாட்டில் தள்ளுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

குற்றவியல் சட்டம் (CP) இதைத் தடை செய்கிறது. அது கீழ்க்கண்டவர்களை தண்டிக்கிறது:

  • ஒருவரின் தோற்றம் (தோல் நிறம்), பிறப்பு, மதம் அல்லது பாலியல் நோக்குநிலை காரணமாக ஒரு நபர் அல்லது ஒரு மக்கள் குழுவிற்கு எதிராக மற்றவர்களை வெறுப்பு அல்லது பாகுபாடு காட்டத் தூண்டும் நபர்கள்
  • ஒரு நபர் அல்லது மக்கள் குழுவைப் பற்றிய இனவெறி கருத்துக்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தும் நபர்கள்
  • ஒரு நபர் அல்லது மக்கள் குழுவை அவர்களின் தோற்றம் (தோல் நிறம்), பிறப்பு, மதம் அல்லது பாலியல் நோக்குநிலை காரணமாக பகிரங்கமாக இழிவுபடுத்தும் அல்லது பாகுபாடு காட்டும் நபர்கள்
  • இனப் படுகொலை (குறிப்பிட்ட மக்களை அழித் தொழிப்பது) என்றே ஒன்று இல்லை என்றோ அல்லது அது அவ்வளவு தீவிரமானது இல்லை என்றோ பகிரங்கமாகக் கூறும் நபர்கள்.
  • தோற்றம் (தோல் நிறம்), பிறப்பு, மதம் அல்லது பாலியல் நோக்குநிலை காரணமாக ஒரு நபர் அல்லது மக்கள் குழுவிற்கு சேவைகள் அல்லது பொருட்களை வழங்க மறுக்கும் நபர்கள். இந்த சேவைகள் மற்றும் பொருட்கள் அனைவருக்கும் பொதுவானவை.

இந்தச் செயல்கள் பொது வெளியில் செய்யப் படுவது மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள், இருதரப்பினர் ஒருவரையொருவர் உண்மையில் அறிந்திருக்கவில்லை என்றால் மட்டுமே.

இது போன்ற செயல்களைத் தண்டிக்க, தண்டனை அபராதமாகவோ (பணம்) அல்லது சில நேரங்களில் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையாகவோ இருக்கலாம்.

ஒருவர் இனவெறியால் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது சாட்சியாகவோ இருந்தால், அவர் என்ன செய்ய வேண்டும்?

சட்டத்தால் தடைசெய்யப்பட்ட இந்த செயல்களால் பாதிக்கப்பட்டவர் அல்லது சாட்சியாக இருப்பவர், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். அந்த நபர் அதை எழுத்துப்பூர்வமாக அரசு வழக்கறிஞருக்கோ அல்லது விசாரணை நீதிபதிக்கோ அறிவிக்கலாம்.

பின்னர் அதிகாரிகள் விசாரிப்பார்கள். செயல்கள் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 261b இன் கீழ் இருந்தால், நீதிமன்றங்கள் இந்தச் செயல்களைச் செய்தவர்கள் மீது நேரடியாக வழக்குத் தொடரும் (அலுவல் ரீதியான சட்ட நடவடிக்கைகள்).

சிவில் சட்டம்

சிவில் சட்டம் மக்களிடையேயான உறவுகளின் விதிகளை வரையறுக்கிறது. இது ஒவ்வொரு நபரின் உரிமைகள் மற்றும் கடமைகளை வகுக்கிறது.

உதாரணமாக, சிவில் சட்டம் குடும்ப உறவுகள், வாரிசுரிமை மற்றும் பல்வேறு ஒப்பந்தங்களை, அதாவது வேலைவாய்ப்பு, விற்பனை, வாடகை மற்றும் சேவை ஒப்பந்தங்களை ஒழுங்கு படுத்துகிறது.

சிவில் சட்டம் தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்கிறது (சிவில் சட்டம் CC இன் பிரிவு 28 மற்றும் கடமைகள் சட்டம் CO இன் பிரிவு 328).

தனிநபர் பாதுகாப்பு என்றால் என்ன?

சிவில் சட்டத்தின் படி, தனிநபர் பாதுகாப்பு என்பது, ஒருவரின் உயிருக்கும் உடலுக்கும் பாதுகாப்பு, அவரின் மாண்பு, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ஆளுமைக்கு முக்கியமான பிற கூறுகள் ஆகியவை பாதுகாக்கப்படல் ஆகும்.

இனவெறிச் செயலால் ஒருவரின் ஆளுமை பாதிக்கப்படுகிறதா? அந்தச் செயலைச் செய்தவரை நீதியின் முன் நிறுத்தும் உரிமை அவருக்கு உண்டு. அந்த நபர் இழப்பீடும் பெறலாம்.

இனப் பாகுபாட்டிற்கு எதிரான சர்வதேச ஒப்பந்தம்

மற்ற நாடுகளைப் போலவே, சுவிட்சர்லாந்தும் Convention internationale sur l’élimination de toutes les formes de discrimination raciale (அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தில்) கையெழுத்திட்டுள்ளது. கையெழுத்திடுவதன் மூலம், நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் நீக்குவதற்கு உறுதியளிக்கின்றன.

மக்கள் குழுக்களுக்கும் "இனங்களுக்கும்" இடையே புரிதலை ஊக்குவிப்பதற்கும் அவர்கள் உறுதியளிக்கிறார்கள்.

"இனம்" என்ற சொல் பெரும்பாலும் சட்டத்தில் பயன்படுத்தப் படுகிறது. இந்தக் காரணத்திற்காக, உண்மையில் மனிதனில் இனங்கள் இல்லாவிட்டாலும், "இனம்" என்ற வார்த்தையை நாமும் பயன்படுத்துகிறோம். மனிதர்கள் அனைவரும் ஒரே ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் மக்களின் மனதிலும் மனப்பான்மையிலும், "இனங்கள்" என்ற எண்ணம் இன்னும் உள்ளது.

இது ஒரு சமூகக் கற்பிதம். இனப் பாகுபாடு இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது:

மக்கள், தங்கள் "இனம்" காரணமாக, தங்களுக்கு இடையே சமமாக இல்லை. மனிதனில் இனங்கள் இல்லாவிட்டாலும் கூட.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் தொடர்ந்து அறிக்கைகளை எழுத வேண்டும். தங்கள் நாட்டில் இனப் பாகுபாட்டை ஒழிக்க அவை என்ன செய்கின்றன என்பதை இனப் பாகுபாடு ஒழிப்புக் கமிட்டியிடம் முன்வைக்க வேண்டும் (Comité pour l’élimination de la discrimination raciale).

சுவிட்சர்லாந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சுவிட்சர்லாந்தும் இந்த அறிக்கைகளை எழுத வேண்டும்.

ஒரு நபர் அல்லது மக்கள் குழு இனவெறியால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் சுவிட்சர்லாந்தில் அனைத்து வழிகளிலும் முயற்சி செய்தும் வெற்றி பெறவில்லை என்றால், அவர்கள் இனப் பாகுபாடு ஒழிப்புக் கமிட்டியைத் தொடர்பு கொள்ளலாம் (Comité pour l’élimination de la discrimination raciale).

பின்னர் கமிட்டி, அந்த நபரின் பெயரைக் குறிப்பிடாமல், சம்பந்தப்பட்ட நாட்டிற்கு நிலைமையை அனுப்புகிறது.

பின்னர் கமிட்டி, நாட்டிற்கும் சம்பந்தப்பட்ட நபருக்கும் பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளுடன் ஒரு தீர்மானத்தை அனுப்புகிறது. இது நாட்டிலும் மக்களிடையேயும் இனவெறியின் யதார்த்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட நாடு இந்தப் பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் நீதிமன்றங்கள் சட்ட முடிவுகளை எடுக்க இந்தப் பரிந்துரைகளைப் பயன்படுத்துகின்றன.

எடுத்துக் காட்டுகளாக நீதிமன்ற தீர்ப்புகள்

பாகுபாடு குறித்த நீதிமன்றத் தீர்ப்புகளை அறிந்து சேகரிப்பது முக்கியம். இது புதிய சூழ்நிலைகளுக்கு எடுத்துக் காட்டுகளாக செயல்படுகிறது. நாம் இதை நீதித்தொகுப்பு (ஜூரிஸ்ப்ரூடன்ஸ்) என்று அழைக்கிறோம்.

சுவிட்சர்லாந்தில், La Commission fédérale contre le racisme (இனவெறிக்கு எதிரான கூட்டாட்சி ஆணையம்) அதன் வலைத்தளத்தில் நீதிமன்ற தீர்ப்புகளைப் பதிவு செய்கிறது.

சுவிட்சர்லாந்தின் கரிட்டாஸ் (Caritas Suisse) தொண்டு நிறுவனத்தின் Info-racisme என்ற இனவெறித் தகவல் மையமும் நீதிமன்றத் தீர்ப்புகளை பார்வைக்கு வைக்கிறது. அது அவற்றை வேலை, சமூக தொடர்புகள் மற்றும் ஊடகங்கள், பள்ளி மற்றும் மதம் போன்ற தலைப்புகளில் சுருக்கி வகைப்படுத்தி வைத்து இருக்கிறது.